Saturday, December 1, 2012

அம்மானைப் பாடல்கள்


(வளைகுறிக்குள் காணும் எண்கள் கட்டுரை இறுதியில் தொகுத்துள்ள மேற்கோள் வரிசை எண்ணைக் குறிப்பன.)
.. அனந்த் (அனந்தநாராயணன்)..

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இது, இரண்டு அல்லது மூன்று பெண்கள்  அம்மானைக் காய்கள் எனப்படும் மரத்தால் ஆக்கி வண்ணம் இடப்பட்ட சிறு உருண்டைகளை மேலே எறிந்து அவை கீழே விழுங்கால் அவற்றில் ஒன்றைக் கழித்து அல்லது கூட்டிப் பிடிப்பதாக அமைந்த விளையாட்டு. மரக்காய்களுக்குப் பதிலாகக் கற்களையோ, மணிகளையோ பயன்படுத்துவதும் உண்டு.

இலக்கியத்தில், இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுவரை உள்ள அரிவைப் பருவத்துப் பெண்களுக்குரிய விளையாட்டாக அம்மானை காணப்படும் (1).

இவ்விளையாட்டை ஆடுகையில் பாடப்படுவனவாக எழுந்தவை அம்மானைப் பாடல்கள் (2,3).

இவை காலப் போக்கில் பலவகையான மாறுதல்கள் பெற்றுப் பயின்றன.


அம்மானைப் பாடல் வகையை முதன்முதலில் சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் வாழ்த்துக்காதையில் 'அம்மானை வரி'  என்னும் தலைப்பில் காண்கிறோம்:


"வீங்குநீர் வேலி லகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை;
சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை"


என்று தொடங்கி ஐந்தடிகள் கொண்ட நான்கு அம்மானை வரிப் பாடல்கள் அம்மானை விளையாடும் மகளிர் தம் ஆட்டம் வழியே சோழ மன்னனின் புகழைப் பாடி மகிழ்தலைக் காட்டுகின்றன.

இசைப்பாட்டாகப் பொலியும் இப்பாடல்களில் வெண்டளை முழுமையாகப் பயில்வதைக் காணலாம். முதல் இரு அடிகளில் ஒரு கேள்வியும், அடுத்த இரு அடிகளில் விடையும், இறுதி அடியில் வாழ்த்தும், இரண்டு-மூன்று அடிகளில் மடக்கும் அமைந்து கலித்தாழிசை வடிவில் காணும் இப்பாடல்கள் மூன்று பெண்கள் தமக்கிடையே உரையாடிக் கொள்வதைக் காட்டுகின்றன எனச் சொல்வர்.

ஒவ்வொருவர் ஓரொரு பாடலைப் பாடித் தம் வாழ்த்தைத் தெரிவிப்பதாகக் கொள்ளலாம்.

திருமுறைகளில், அம்மானை ஆட்டம் பற்றிய குறிப்பைத் திருஞானசம்பந்தரின் பாடல் ஒன்றில்,


கருந்தடங்கண் ணார்கழல்பந்(து அம்மானைப்
பாட்டயருங் கழுமலமே   


என்ற குறிப்பு இருப்பினும் அம்மானைப் பாடல்கள் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் அன்றி மற்ற இடங்களில் காணப்படுவதில்லை. 

திருவாசகத்தில், திருவம்மானை என்ற தலைப்பில்உள்ள இருபது பாடல்கள் 'அம்மனாய் ' என்ற சொல்லைப் பாட்டின் இறுதிச் சொல்லாகக் கொண்டுள்ள.


"பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"


என்றவாறுள்ள இவ்வம்மானைப் பாடல்கள், சிலம்பில் காண்பது போல் மன்னனைப் பற்றி அல்லாமல் இறைவனைப் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றன. இம்மாற்றத்தை முதலில் மாணிக்கவாசகர் செய்தார் எனத் தோன்றுகிறது. மேலும், இவை வினா-விடை வடிவில் அமையவில்லை.

சிலம்பில் கண்ட கலித்தாழிசை வடிவம் இப்பாடல்களில் கொச்சகக் கலி யாக மாறியிருப்பதைக் காண்கிறோம்.

வெண்டளை பயிலுமாறு அமைக்கப்பட்ட இப்பாடல்களின் ஓசைநயம் கருதியும், இவற்றை அடுத்து வரும் திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி போன்ற மகளிர் விளையாட்டுகளை ஒட்டி அமைந்துள்ள பாடல்களைக் கருதியும், திருவம்மானைப் பாடல்கள் அம்மானை விளையாட்டில் பாடுவதற்காக அமைந்தவை எனத் தெரிகிறது (4).

ப்பாடல்களில்,  அம்மானாய் என்ற சொல்லைத் திருப்பாவையின் பத்தாவது பாட்டில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்') காண்பது போல அம்மா என்று பொருளில் விளையாடச் சேர்ந்திருக்கும் மகளிரை முன்னிலைப் படுத்திக் கூறும் சொல்லாகத் தெரிகிறது.

இதுபோல, அம்மனை, அம்மனார், அம்மானே போன்ற சொற்களும் பயன்படுத்தப்படும்.


சிலம்பில் தாழிசை வடிவிலும் திருவாசகத்தில் கொச்சகக் கலிப்பா வடிவிலும் அமைந்த அம்மானைப் பாடல் அடுத்துக் கலம்பகம், உலா, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களில் (15-16-ஆம் நூற்றாண்டுகளில்) மேலும் மெருகூட்டிய தரவுக் கொச்சகக் கலிப்பா வாக உருக்கொண்டது.


பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மூவரம்மானை'யின் முதல் பாடல்:


புந்திவனஞ் சூழும் பொருவில்லாப் பிள்ளையார்
தந்திமுகன் குடவயிற்றன் சப்பாணி அம்மானை
தந்திமுகன் குடவயிற்றன் சப்பாணி ஆமாகில்
இந்த வயிற்றுக்கு இரையெங்கே அம்மானை?
இன்றென்றே ஈசன் இரக்கலுற்றான் அம்மானை!


திருவரங்கக் கலம்பகத்தில் உள்ள ஒரு பாடல்:

தேனமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலார்காண் அம்மானை
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலரே ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை?
தாரமாய்க் கொண்டதுமோர் சாபத்தால் அம்மானை!


(சாபம் = வில்)

சிலப்பதிகார அம்மானை வரிப் பாடல்களைப் போல இவற்றில் வினா-விடை  அமைப்பும் அடிமடக்கும் பயிலக் காண்கிறோம். எனினும், இப்பாடல்களின் சொற்களில் காணும் வஞ்சப்புகழ்ச்சி/நையாண்டி வகை நகைச்சுவையும், குறிப்பாக, இறுதியடியில் சிலேடை நயம் தோன்ற விடையளித்து ஒரு திருப்பத்துடன் முடிக்கும் முறையும் அம்மானைப் பாடல்களின் அழகிய பரிணாம வளர்ச்சியைப் பறை சாற்றுகின்றன.


இப்பாடல்களின் பின்னணியான அம்மானை விளையாட்டில், பாட்டுடைத் தலைவனின் குணநலன்களைக் கூறும் ஒரு பெண்ணும், அவை பற்றிய கேள்வியொன்றை எழுப்பும் ஒரு பெண்ணும், அதற்கு விடையளிக்க மூன்றாவதாக ஒருபெண்ணும் பங்கெடுப்பதாகக் கற்பனை செய்யலாம். இரு மகளிர் மட்டுமே இருப்பதாகவும் கருதலாம்.

இவற்றில் உள்ள சிறப்பு ஐய வினாவிற்குக் கூறும் விடையில் சிலேடையும், குறிப்பும், சமத்காரமும் அமையச் செய்வதேயாம். சிலபோது நேர் விடையும் அமையும். ஆதலின், புலமைநலஞ் சான்றோர் தம் கவித் திறனையும், எடுத்துக்கொண்ட பொருள் திறனையும் விளக்க இப்பாடல் வகையைக் கையாண்டனர்(3).

இவ்வகை அம்மானைப் பாடல்களை வெண்டளை பயிலும் தரவு கொச்சகக் கலிப்பா அல்லது 'உறழ்கலிப் பா ' (வினா-விடை கொண்ட கலிப்பா) என்னும் வகையைச் சார்ந்த எனக் கொள்ளலாம்.

இப்பாடல்களில் ஒலிக்கும் வெண்பா யாப்பிற்குரித்தான செப்பலோசை அம்மானை ஆட்டத்திற்கு உகந்ததெனக் கருதியதாகக் கொள்ளலாம்.

தனக்கென ஒரு தனி நடையை வகுத்துக்கொண்டு படிப்பதற்கு
இன்பந்தரும் இவ்வகையான அம்மானைக்கு எடுத்துக் காட்டாகப் பல பாடல்களை இக்கட்டுரையின் முடிவில் இணைப்பாகத் தந்துள்ளேன். அவற்றுள் சில வெண்டளை பயிலாதனவாகவும் அமைந்துள்ளன.

அம்மானை தொண்ணூற்றாறு வகைப் பிரபந்த வகைகளில் ஒன்று. ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திக்கும் (13-ஆம் நூற்றாண்டு?) இடையே ஒரு வாக்குவாதம் நடைபெற்றதாகவும், அது அம்மானை வடிவத்திலேயே நடந்ததாகவும் வினோதரசமஞ்சரி போன்ற நூல்களில் பார்க்கலாம்.


புகழேந்தியின் பாடல்:


திருநெடுமால் அவதாரஞ் சிறுபுலியோ அம்மானை!
. . சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானை!
ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளிந்தது அம்மானை!
. . ஒப்பரிய விளையாட்டு உறந்தையிலோ அம்மானை!
கரையெதிர்ஏ டேறியது காவிரியோ அம்மானை!
. . கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானை!
பரவைபடிந் ததும்சோழன் பதந்தனிலோ அம்மானை!
. . பாண்டியனார் பராக்கிரமம் பகர்எளிதோ அம்மானை!


அம்மானை என்பது ஒரு மகடூஉ முன்னிலைச் சொல்லாக மட்டுமே அமைவதும், வினா-விடை அமைப்பு இன்மையும் இப்பாடல் வகையைச் சிலப்பதிகார, சிற்றிலக்கிய அம்மானைப் பாடல்களிலிருந்து வேறுபடுத்துகிறது.


கடந்த இரு நூற்றாண்டுகளில், அம்மானைப் பாடல்கள் கதைப் பாட்டு என்னும் நாட்டுப்புற இலக்கியமாக மாறி மக்களிடையே வாய்மொழியாகப் பாடப்பெற்றன.

இதுவரை நாம் பார்த்த அம்மானைப் பாடல்களில் உள்ளது போலன்றி, இக்கதைப் பாட்டில், அம்மானை என்ற சொல் குறிப்பிட்ட பொருள் ஏதும் இன்றிக் கேட்போர் கவனத்தை ஈர்க்க மட்டுமே பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது.

அரசியல், சமுதாய, சமயத் தலைவர்களின் வரலாற்றை விவரிப்பதற்கோ அல்லது ஒரு நீண்ட கதையைப் பாடல் வழியாகக் கூறுவதற்கோ இந்த அம்மானைக் கதைப் பாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இராமப்பய்யன் அம்மானை, ஆமையார் அம்மானை (2), சிவகங்கைச் சீமை அம்மானை, அகிலத் திரட்டு அம்மானை (1)  போன்ற பல இவ்வகையைச் சார்ந்தவை.

ஆமையார் அம்மானை என்னும் நூலை நான் படித்துச் சுவைத்துள்ளேன். சுவாரசியமான கதையையும் அழகிய வர்ணனைகளும் கொண்ட செய்யுள் பகுதிகள் கொண்ட அந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (2).

கதைப்பாட்டுகளின் இலக்கிய நயம் எழுதுபவரின் திறனையும் நோக்கத்தையும் பொறுத்து அமையும். காட்டாக, 3745 அடிகள் கொண்ட ஆமையர் அம்மானை பெரும்பாலும் வெண்கலிப்பா நடையிலும் இடையே விருத்தம், கலி விருத்தம், சந்த விருத்தம் ஆகிய குறிப்புக்களோடும் அமைந்துள்ளது. பாடல் முற்றிலும் பொழிப்பு மோனை பயில்கிறது.

எல்லா அம்மானைக் கதைப்பாட்டுகளும் இவ்வாறு இலக்கணங் கொண்டு அமைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

லாவணி' என்றழைக்கப்படும் சமீபத்திய கதைப்பாட்டும் அம்மானைக் கதைப் பாட்டுப் போலவே அமைந்திருக்கும். குதிரை லாவணி போன்றவை அன்றாடப் பேச்சு வழக்குத் தமிழில் குறிப்பிட்ட இலக்கணம் ஏதுமின்றி அமைவதைப் பார்க்கலாம் (*).     


அம்மானைப் பாடலின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியத்திலோ, பாட்டியல் போன்ற பழைய யாப்பிலக்கண நூல்களிலோ குறிப்பில்லை.

சிலப்பதிகாரத்திலும் சிற்றிலக்கியங்களிலும் பிரபந்தங்களிலும் அண்மைக்கால நாட்டுப்புற இலக்கியத்திலும் தாம் கண்ட அம்மானைப் பாடல் அமைப்புக்களை நோக்கி அதற்கான யாப்பு இலக்கணத்தை முதன்முறையாக நமக்குத் தந்தவர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவார் (4).  

அறுவகை இலக்கணம் என்னும் அவரது நூலில் உள்ள நூற்பாக்கள் அம்மானைப் பாடலின் காலத்திற்கேற்ற வளர்ச்சியையும் சுட்டுகின்றன:


இரண்டு நாலைந் தெனுமடி ஈற்றில்
தன்பெயர் குலவத் தக்க அம்மானை
ஐந்தடிக் கலிப்பா போலும் அதனிடை
சொல்லலும் மறுத்தலும் விடையும் தானே
கூறினர் பற்பலர் குவலயத் திடத்தே


அம்மானை ஈற்றின் விடைமொழி யதனுள்
இருபொருள் காட்டல் மிகையாம் முப்பொருள்
நாற்பொருள் மொழியினும் இசைவுறல் நலமே


கலிப்பா அரையரை யாகக் கூட்டியும்
எதுகை இன்றித் தனித்தனி சேர்த்தும்
காதை அம்மானை கழறினர் சிலரே


கொச்சகச் சீர்கொடு கூறுமம் மானை
இழிவின தாகுமென் றிசைப்பது துணிவே


இதுவரை நாம் கண்ட செய்திகளிலிருந்து, அம்மானை என்னும் செய்யுள் வகை சிலப்பதிகாரத்தில் பிறந்து, மணிவாசகரின் திருவம்மானையில் தவழ்ந்து, சிற்றிலக்கியம் பிரபந்தங்களில் முழு வளர்ச்சியுற்று, அண்மைக்கால அம்மானைக் கதைப் பாட்டுக்களைத் தன் குழந்தைகளாகப் பெற்று நம்மிடையே இன்னும் இளமை குன்றாத் தமிழ் இலக்கியமாகத் திகழ்கிறது என்று அறிகிறோம். 



----------------------------



மேற்கோள்கள்:


1. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில், அம்மானைப் பருவம் பத்துப் பருவங்களில் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. பாட்டுத் தலைவன்/தலைவியைச் சிறு பிள்ளையாகக் கருதிப் அம்மானை விளையாடக் கேட்குமாறு அமைந்த இப்பாடல்கள் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பைச் சார்ந்தவை அல்ல


2)  Burrow and Emeneau's Dravidian Etimology, 182.


Ammanai-   girls' game of keeping a number of balls in the air, some rising while others are falling; balls used in the game. Malayalam ammana, ammanam game of throwing and catching handballs. Kannada: ammale game of throwing handballs or stones in the air and catching them in the hand. Telegu: ammanalu, ammanamulu game in which a number of balls are thrown in the air, one being caught in the hand descending whilst others are rising (DED 153).


3.  http://en.wikipedia.org/wiki/Ammanai


“Ammanai is a type of Tamil poetry belonging to the family of "Tharavu kochchaga kalippa". This is a type of poetry associated with a game of the same name that was popular with teen girls. Ammanai will be in the form of questions and answers. Ammanai generally follows the rules of a venba, but can occasionally have kalithalais and belongs to the kalippa family.


4. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியரின் குறிப்பில் சாழல் விளையாட்டு (கூத்து) சுட்டப்படுகிறது. அம்மானையைப் போல, இரு பெண்களின் பங்கேற்பு சாழல் பாடலின் அமைப்பிலும் தெரிகிறது. இதுவும் யாப்பில், கொச்சகக்கலிப்பா வகையைச் சேர்ந்தது. (மணிவாசகர் ஈழத்தில் ஒரு ஊமைப் பெண்ணைச் சமணர்கள் எழுப்பிய வினாக்களைத் தாம் எழுப்பி அவளை விடையளிக்க வைத்த நிகழ்ச்சியைத் திருச்சாழல் பகுதி சுட்டுகிறது என்று ஒரு கதையுண்டு.) தம் விளையாட்டுகளிலும் இசையும் இலக்கணமும் பொருந்திய தமிழ்ச் செய்யுள்களை அக்காலப் பெண்டிர் பாடி வந்ததை இதன் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். பிற்காலத்தில்,  கும்மி, சிந்து போன்ற வடிவில் இவ்வழக்கம் பெருகி வளர்ந்தது.


5. ‘The vows fulfilled- ஆமையர் அம்மானை', General editors Dr. Shu Hikosaka and Dr. John Samuel, Editor M. Marimuthu, Rendering in English G.S. Balakrishnan, Institute of Asian Studies, Chennai, 1996.


6. தனிப்பாடல் திரட்டு, இரண்டாம் பாகம், பதிப்பாசிரியர் ச.பாலசுந்தரம், சரஸ்வதி மஹால், 1969.  


7. அறுவகை இலக்கணம், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (தவத்திரு சாந்தலிங்க அடிகளார்த் தமிழ்க் கல்லூரி, பேரூர், 1978)


இணைப்பு :


மேலுள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்ட சிலேடைநயம் பொருந்திய அம்மானைப் பாடல்களுக்குக் காட்டுகளாகப் பல பாடல்கள் இந்த இணைப்பில் தொகுக்கப் பட்டுள்ளன.


1) ‘தனிச்செய்யுட்சிந்தாமணி ' யில் காணும் சில அம்மானைப் பாடல்கள்: 



வற்றாத வையையிலும் வாள்விசயன் தன்கையிலும்
பற்றாமல் அண்ணலடி பட்டனர்காண் அம்மானை;
பற்றாமல் அண்ணலடி பட்டனரே ஆமாயின்
பெற்றோரில் லாதசிறு பிள்ளையோ அம்மானை?
... பிள்ளை மதியுடைய பித்தர்காண் அம்மானை.


கற்றைச் சடைமுடியார் கச்சியே கம்பருக்கு
நெற்றிக்கண் ணொன்று நெருப்பதுகாண் அம்மானை;
நெற்றிக்கண் ணொன்று நெருப்பதுவே ஆமாயின்
பற்றிச் சடையில் படராதோ அம்மானை?
... படருமென்றே கங்கை பதிவிருந்தாள் அம்மானை.


மன்னுவெள்ளி யம்பலமும் மாசறுபொன் னம்பலமும்
என்னுடைய ஈசற் கிவையிரண்டுண்(டு) அம்மானை;
என்னுடைய ஈசற் கிவையிரண்டுண்(டு) ஆமாயின்
இன்னும்இருப் பம்பலம்ஒன் றில்லையோ அம்மானை?
... இருப்பம் பலமடியார் இதயங்காண் அம்மானை


செல்லார் வலஞ்சுழியிற் செங்கழுநீர்ப் பிள்ளையார்
எல்லார்க்கும் நல்லவரம் ஈயர்காண் அம்மானை;
எல்லார்க்கும் நல்லவரம் ஈவாரே ஆமாயின்
தொல்லுலகில் உள்ளோர் துதியாரோ அம்மானை?
... துதிக்கை அவர்தமக்குச் சொந்தமன்றோ அம்மானை?


அம்புலியூர் என்னும் அணிகொள் சிதம்பரத்தே
வெம்புலியொன்(று) எந்நாளும் மேவுங்காண் அம்மானை;
வெம்புலியொன்(று) எந்நாளும் மேவுமே யாமாயின்
அம்பலத்தைத் தான்விட் டகலாதோ அம்மானை?
... ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை?


இந்நூலில் இவற்றைத் தொடர்ந்து இன்னும் இருக்கக்கூடிய பாடல்கள் நமக்குக் கிட்டவில்லை.


2)  குமரகுபரசுவாமிகள் இயற்றிய மதுரைக் கலம்பகத்தில் காண்பவற்றில் ஒன்று (கலம்பகத்தில் அம்மானை ஒரு உறுப்பாக வருவதுண்டு):

இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை
விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே ஆமாகில்
அருமையுடம்(பு) ஒன்றிருகூ(று) ஆவதேன் அம்மானை?
ஆனாலும் காயமிலை ஐயரவர்க்(கு) அம்மானை!


உரையாசிரியர் விளக்கம்: விருதுகட்டி அங்கம் வெட்டி வென்றது: மதுரையைக் குலோத்துங்க பாண்டியன் ஆளுகையில் வாள்வித்தை கற்றுக்கொடுத்துவந்த ஆசான் ஒருவரின் சீடன் (சித்தன்) தகாத முறையில் நடக்க முயன்றபோது ஆசானின் மனைவி இறைவனிடம் முறையிட, சோமசுந்தரக் கடவுள் அந்த கிழட்டு ஆசான் வடிவில் சித்தனை வாளால் வெட்டி அழித்ததைக் குறிப்பது. இப்பாட்டில் உரையாசிரியர் புன்னைவன நாத முதலியார் "அம்மானையாவது *மூன்று* மங்கையர் விளையாடும் போது பிரபந்தத் தலைவனின் தன்மையைப்பற்றி உரையாடுதல்" என்று குறிக்கிறார்.



3)  தனிப்பாடல் திரட்டு (2-ஆம் பாகம், ச.பாலசுந்தரம், சரஸ்வதி மஹால், 1969)  நூலில் கண்ட சில பாடல்கள்:

எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர்க்கும் ஆனபிரான்
வள்ளல்திருச் செஞ்சடைமேல் வாழ்பாம்புண் டம்மானை
வள்ளல்திருச் செஞ்சடைமேல் வாழ்பாம்புண் டாமாகில்
துள்ளிவரும் அம்புலியைத் தொடராதோ அம்மானை?
தொடருமோ மயிலாடு துறைகண்டா லம்மானை!


தெண்டிரைசூழ் தில்லைச் சிவகாம சுந்தரியார்
கண்டமெல்லாம் ஞானக் கரும்புகாண் அம்மானை
கண்டமெல்லாம் ஞானக் கரும்பதுவே ஆமாகில்
அண்டர்பிரான் ஆலையிலே ஆடாரோ அம்மானை?
ஆடிப் புலியூர் அமர்ந்தனர்காண் அம்மானை!


(ஆலையிலே ஆடாரோ= கரும்பாலையில் இட்டு ஆட்டாரோ)


மண்டலமுண் தென்னரங்கர் மாறாப் படுக்கையிடக்
கொண்டபாய் அஞ்சுவண்ணக் கோடிப்பாய் அம்மானை
கொண்டபாய் அஞ்சுவண்ணக் கோடிப்பாய் ஆமாகில்
மிண்டியபற் கோவையெலாம் மெத்தநஞ்ச தம்மானை
மெத்தநஞ்ச திப்போ விலைபெறுமோ அம்மானை!


(கோடிப்பாய்- புதியபாய்; பாயின் இருபக்கத்திலும் மடிந்து உள்ளவற்றைப் பல் என்பது வழக்கு. நஞ்சது= நஞ்சுஅது, நைந்தது)


பூங்கா வனஞ்சூழ்ந்த புள்ளிருக்கு வேளூரார்
பாங்கான தென்மதுரைப் பாணர்கா ணம்மானை
பாங்கான தென்மதுரைப் பாணரே ஆமாகில்
தாங்காமல் இழையெடுத்துத் தைப்பாரோ அம்மானை?
தையலுக்கு நல்ல சமர்த்தர்கா ணம்மானை!


பொய்யறவே கண்ணப்பர் பூசித்துப் பேறுபெற்ற
ஐயர்திருக் காளத்தீ யப்பர்காண் அம்மானை
ஐயர்திருக் காளத்தீ யப்பரே ஆமாகில்
கைவிசிறி மாறாக் களையரோ அம்மானை
களையாரோ சிலந்தியுள்ளே கலந்தக்கால் அம்மானை!


(காளத்தீ- காளஹஸ்தித் தலம்; பெரிய வெப்பநோய்; களையரோ - களைப்புடையவரோ;


சிலந்தி - காளஹத்தித் தலத்தில் சிவனை வழிபட்ட பூச்சி; சிலந்தி என்னும் நோய்; அந்நோயைக் களைய மாட்டாரா என்ற பொருள் இறுதியடியில் சிலேடையாக வரும்).

மேலும் சில: 

விரித்தபுகழ்ப் புள்ளிருக்கு வேளூர் வயித்தியனார்
பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதர்காண் அம்மானை
பரிந்துவினை தீர்க்கவல்லபண்டிதரே யானக்கால்
மருந்துவிலை கைக்கூலி வாங்காரோ அம்மானை
வாயிலே மண்போட்டு வாங்குவர்காண் அம்மானை
பூங்கா வனஞ்சூழும் புள்ளிருக்கு வேளூரர்
பாங்கான தென்மதுரைப் பாணர்காண் அம்மானை
பாங்கான தென்மதுரைப் பாணரே ஆமாயின்
தாங்கா திழையெடுத்துத் தைப்பரோ அம்மானை
தையலுக்கு நல்ல சமர்த்தர்காண் அம்மானை

(
மூவர் அம்மானை என்ற நூலிலிருந்து 
தில்லைக்கலம்பகம்-  இரட்டையர்கள்

தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலியொன்     றெந்நாளும் மேவுங்கான் அம்மானை
வெம்புலியொன் றெந்நாளும் மேவுமே ஆமாகில்
அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானை
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை!
அம்மனை ஆட்டம் என்பது மூன்று பெண்களால் மட்டுமே ஆடப்படுவது அல்ல .இரண்டுஏன் ஒரு பெண்கூட அம்மானைக் காய்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து  அம்மானை ஆடலாம் எனத் தெரியவருகிறது.

அம்மானைக் காயென்றால் ஏதோ தேங்காய் மாங்காய்போல எண்ணிக்கொள்ள வேண்டாம்.  சோழியை வைத்துத் தாயம் ஆடுவதில்லையாஅதுபோல மரக்கட்டைகளில் வழுவழௌப்பாகச் செதுக்கிவைத்த சிறு உருண்டைகளே அம்மானைக் காய்கள். அப்படி இல்லாமல் வைரத்தாலோ பிற உலோகங்களாலோ ஆகியும் இருக்கலாம்.


(தமிழில் கலம்பக இலக்கியம்-சௌந்தரபாண்டியன்)
ஆரத் தடவயல்சூழ் ஆமாதை வாழழகர்
தாரொத்த மேனி தழலொத்ததம்மானை
தாரொத்த மேனி தழலொத்த தாமாயின்
ஈரக் கங்காநதியாள் இருப்பதேன் அம்மானை
ஈரம் பெருநெருப்புக் கில்லையே அம்மானை!


- திருவாமாத்தூர் கலம்பகம்- இரட்டைப்புலவர்கள்

இன்ன திதுவென் றிறைவன் திறமதனை
சொன்ன மறையும் துணிந்திலகாண் அம்மானை
சொன்ன மறியும் துணியாத் தோன்றாத்துணையைநம்
கன்னிவனத்திடையே காணலாமம்மானை
கண்டார் பிறிதொன்றும் காணார்காண் அம்மானை!

(திருப்பதிரிப்புலியூர்க்கலம்பகம்தொல்காப்பியத் தேவர்)
நாரா யணணறியா நாதரரு ணேசருக்கு
வாரார் சிலைகலைமெய் மாதங்க மம்மானை
வாரார் சிலைகலைமெய் மாதங்க மாமாயின்
ஆராயும் காலெடுப்ப தையமன்றோ அம்மானை
அன்னமறி ய்யரெடுப்ப தையமோ அம்மானை!


- திருவருணைக் கலம்பகம்- எல்லப்ப நாவலர்
இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசர்
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர்காண் அம்மானை
விருதுகட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில்
அருமையுடம் பொன்றிருகூ றாதேன் அம்மானை
ஆனாலும் காயமிலை அயரவர்க்கம்மானை!

- மதுரைக் கலம்பகம்-  குமகுருபரர்
கலைமதியின் கீற்றணிந்த காசியகிலேசர்
சிலமதனைக் கண்ணழலாற் செற்ரனர்காண் அம்மானை
சிலைமதனைக் கண்ணழகாற் செற்ரனரே யாமாகில்
மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை
வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை!


- காசிக்கலம்பகம்- குமரகுருபரர்.
சீதரராஞ் சோலைமலைச் செல்வரை முன் சந்ததியா
மாதர சோதை வளர்த்தனள்காண் அம்மானை
மாதரசோதை வளர்த்தனளே ஆமாகில்
ஆதரவில்லார்போல் அடித்ததேன் அம்மானை
அடித்ததொரு வன்மத்தால் அல்லவோ அம்மானை!

- அழகர் கலம்பகம்- கவிக்குஞ்சர பாரதி
பூந்துளவன் தென்பேரைப் புங்கவன்மண் மாவலிபால்
ஏந்துகரத் தோனா விரந்தனன் காண் ஆம்மானை
ஏந்து கரத்தோனா விரந்தனனே ஆமாயின்
மாந்தர் பெருங் கன்னனென வாழ்த்துவரோ அம்மானை
வாழ்த்தல் படியளக்க வாய்ந்ததனால் அம்மானை!
-  திருப்பேரைக் கலம்பகம்-அனந்த கிருஷ்ண அய்யங்கார்
ஏனத் திருவுருவன் எம்பெருமான் சௌரீசன்
கூனற் பிறைமருப்பிற் கொம்புயர்த்தான் அம்மானை
கூனற் பிறை மருப்பிர் கொம்புயர்த்தான் ஆமாகில்
தானற்கொபொன்றுரத்துத் தாங்கியதேன் அம்மானை
ஆனற்கொம் பிடைமுன் கூத்தாடினன்காண் அம்மானை


கொம்பு-  பெண்  என்ற பொருள் கொள்க!
- திருக்கண்ணபுரக்கலம்பகம்- திரு . இராசகோபாலன்

நாடனிந்த மக்கா நகர்வாழ் மகுமூதர்
மோடனிந்த காய முழுமதிகா னம்மானை
மோடனிந்த காய முழுமதியே யாமாகில்
மாடணிந்த மேக மறியுமே அம்மானை
மறையல்லோ வெல்லார்க்கும் மாண்புதரும் அம்மானை
மக்காக் கலம்பகம்-செய்கு அப்துல் காதிரு நயினார் லெப்பை ஆலிம்



4) சமீப காலத்திய பாடல்கள்:


அ) சிலேடை மன்னர் கி.வா.ஜகன்னாதனின் அம்மானைப் பாடல்:

வாய்த்த புகழ்மயிலை மாதேவன் தன்காற்கீழ்த்
தேய்த்ததொரு திங்களைத்தன் சென்னிவைத்தான் அம்மானை:
தேய்த்ததொரு திங்களைத்தன் சென்னிவைத்தான் ஆமாயின்,
கோத்த அறிவிற் குறையுண்டோ அம்மானை?
..குறைமதியன் என்றெவரும் கூறுவர்காண் அம்மானை.


தக்கயாகத்தில் சிவன் சந்திரனைக் காலால் தேய்த்தான். காலால் தேய்த்ததைத் தலையில் வைத்ததால், அறிவில் குறையுண்டோ ?

(குறைமதியன் -- குறைவாக உள்ளபிறைச் சந்திரனை அணிந்தவன் என்பது இன்னொரு பொருள்.).

கி.வா.ஜ. இதுபோல இன்னும் அம்மானைப் பாடல்கள் எழுதியுள்ளாரா என்றும், கவிமாமணி தமிழழகன் போன்ற தற்காலத்துக் கவிஞர்கள் எழுதியிருக்கக் கூடிய அம்மானைப் பாடல்கள் பற்றியும் தெரிந்தோர் சொல்லலாம்.


5. நம் சந்தவசந்தக் கவிஞர்களும் இவ்வகையான அம்மானைப் பாடல்கள் எழுதியுள்ளனர். காட்டாக,



சௌந்தர்:


அ)


மருதிடையே போவானாம் மாமாயம் செய்வானாம்
தருமவற்றைத் தாமுடைக்கும் தன்மையனாம் அம்மானை
தருமவற்றைத் தாமுடைக்கும் தன்மையனாம் ஆமாயின்
எருதுகளை எதிர்கொண்டு என்செய்வான் அம்மானை?
. .கொம்பொசித்து நப்பின்னை கொள்வானாம் அம்மானை.

ஆ)


அப்பனும் மாமனும் அடிபட்டே அயர்ந்தாலும்
சுப்பனை அடியரெலாம் சூழ்ந்தனரே அம்மானை
சுப்பனை அடியரெலாம் சூழ்ந்தனரே ஆமாயின்
அப்பன்போல் அடிபட்டே அயர்வானோ அம்மானை?
. . . அடியரெலாம் அடியாரே ஆயிடுவர் அம்மானை!




ஆரமுதாம் அண்ணல் அரங்கர்தம் பொற்பாதம்
ஊரறிய கோதை  உளம்வைத்தாள்  அம்மானை
ஊரறிய கோதை உளம்வைத்தாள் ஆமாயின்
ஆரணங்கின் அந்தரங்கம் அம்பலமோ  அம்மானை?
. . அந்தரங்கன் சேருமிடம் அந்தரங்கம் அம்மானை!


எனது அம்மானைப் பாடல்கள்:


விநாயகர்


தட்டில் பணியாரம் தாம்அளிக்கும் அன்பர்களை
முட்டிமண் தோய வணங்கவைப்பார் அம்மானை
முட்டிமண் தோய வணங்கவைப்பார் ஆமாகில்
கொட்டாதோ கும்பிடுவோர் கண்ணில்நீர் அம்மானை?
கொட்டில் மனம்களிக்கும் குழந்தைகாண்அம்மானை!


(கொட்டு = குட்டு; தொழுவோர் தம் தலையில் குட்டிக்கொள்ளல்; 'வருவோர்தம் தலையில் தடபடெனக் குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை'- அருணகிரிநாதர்)




முருகன்:

மேட்டுக் குடிப்பெண்ணை வேண்டிமணம் செய்தவரோர்
காட்டுக் குறமகளைக் காதலிப்பார் அம்மானை
காட்டுக் குறமகளைக் காதலிப்பார் ஆமாகில்
வேட்டுவர்கள் வாட்டுதலும் வேண்டுவரோ அம்மானை?
சேட்டனாம் ஆனைதுணை சேர்ப்பார்காண் அம்மானை!


(சேட்டன் தமையன்)


பிரம்படியும் மத்தடியும் பெற்றவரின் சுற்றமொடு
கரத்தில் தடிஏந்தும் கந்தர்காண் அம்மானை!
கரத்தில் தடிஏந்தும் கந்தரே ஆமாயின்
சிரம்குவிக்கும் அன்பர்களைச் சீண்டாரோ அம்மானை?
*சிரத்தைஅவர் நோக்கிச் சினமடையார் அம்மானை!


(*சிரத்தை நோக்கி = தலையைக் கண்டு; அடியாரின் அக்கறையை, பக்திச் சிரத்தையைக் கண்டு)


அங்கயற்கண்ணி:


மாமதுரை மையமாய் வையமெலாம் ஆண்டெமக்குச்
சேமநலம் தாம்அருளும் சேல்விழியார் அம்மானை
சேமநலம் தான்அருளும் சேல்விழியார் ஆமாகில்
சோமனணி சொக்கருமேன் தோலுடுப்பார் அம்மானை?
தாமடைந்த தோலதனைச் சாற்றிடவே அம்மானை!


(தோல் = அபசயம்/தோல்வி; அழகு, புறத்தோல்)  




கண்ணன்: (விளக்கப் பின்னணியுடன் )


பெரும்பாம்புப் பேரணையில் பள்ளிகொண்டார் கோகுலத்தில்
உருச்சிறிதாய் மாறி உலவுவர்காண் அம்மானை!"
உருச்சிறிதாய் மாறி உலவுவரே ஆமாயின்
தருவரன்றோ தொல்லை சழக்கியர்தாம் அம்மானை?
தருவதைத் தாம்உடைக்கும் தன்மையர்காண் அம்மானை!"


(ஈற்றடியில்: தருஅதை = மரத்தை)
சிவன்

அம்பலத்தார் அம்மானை:




மற்ற தலைப்பில்:

அரசியலார் அம்மானைப் பதிகம்http://chandhamanantham.blogspot.com/2012/12/blog-post_6.html
l
----------



 

 

2 comments:

  1. அருமையான தொகுப்பு..! அற்புதமான தமிழ்த் தொண்டு..! நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. விளக்கம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    ReplyDelete